அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே
 

நமஸ்காரம்/ஆசீர்வாதம்.

இந்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழக சட்டப்பேரவை தேர்தல்கள் நடக்க இருக்கின்றன என்பது தாங்கள் அறிந்ததே.

1989ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் முதற்கொண்டு, “பிராமண வாக்கு வங்கி” உருவாக்குகின்ற பணியினை நாம் தொடர்ந்து செம்மையாக செய்து வருகின்றோம்.

தற்போதைய காலகட்டத்தில் தமிழகத்தினுடைய சட்டப்பேரவை தேர்தலில் 30 தொகுதிகளில் பிராமண சமூகத்தினுடைய வாக்குகள் என்பது தீர்மானிக்கின்ற (Deciding Factor) அம்சமாக இருந்திடும்.

1989ம் ஆண்டில் நான் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தில் மாநில அரசியல் ஆய்வுக்குழு செயலாளராக சேவையாற்றி உள்ளேன். தொடர்ந்து பல்வேறு மாநிலப் பொறுப்புகளில் சேவை செய்து விட்டு 2000ம் ஆண்டு முதல் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு தொடர்ந்து சேவை செய்து வருகின்றேன்.

ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து நமது சங்கத்தின் வளர்ச்சிக்கும், பிராமண பாரம்பரியத்தின் மேன்மைக்கும் பாடுபட்டு வருகின்றேன். என்னுடன் 200 மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்களும், 800 மாநில செயற்குழு உறுப்பினர்களும், 3000த்திற்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களும் ஒரு குழுவாக (Team Work) சேவையாற்றி வருகின்றோம். அந்த அடிப்படையில் தமிழகத்தின் பூகோளம், பல்வேறு அரசியல் கட்சிகளின் செயல்பாடு மற்றும் பிராமண சமூகத்தினரின் தொகுதிவாரியான ஜனத்தொகை விவரங்களை நாங்கள் நன்கு அறிவோம்.

தற்போது நமது சங்கத்தினுடைய சில நிர்வாகிகள், நடைபெற இருக்கின்ற சட்டபேரவை தேர்தலில் சங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று கேட்டு வருகின்றனர்.

ஓர் ஜனநாயகவாதியாக, ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் நமது பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை எழுத்து வழியாக தெரிந்து கொண்டு அதன் அடிப்படையில் சங்கத்தின் நிலைப்பாட்டினை நான் அறிவித்து வருகின்றேன். தற்போதும் அதே நடைமுறையினை கடைப்பிடித்து, மாநில பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை தெரிந்து கொண்டு அதன் அடிப்படையில் சங்கத்தின் முடிவினை எடுத்து அறிவிக்க விழைகின்றேன்.

தேர்தல் கருத்துக் கேட்பு சுற்றறிக்கை இந்த மாத இதழில் இந்த மடலுக்கு அருகில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை மாநில அமைப்பின் வாட்ஸ்அப் குழு வழியாகவும் சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில பொதுக்குழுவில் உறுப்பினர்களாக இல்லாத தாம்ப்ராஸ் மாத இதழ் வாசகர்களின் மேலான கருத்துக்களையும் அறிய விழைகின்றேன். உங்களுடைய கருத்தினை அதாவது 2026 சட்டப்பேரவை தேர்தலில் நமது சங்கம் எந்த அணியினை/எந்த கட்சியினை ஆதரிக்க வேண்டும் என்று நீங்களும் தெரிவித்திட அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

நமது சங்கத்தின் முடிவு என்பது கடந்த கால அரசியல் நிகழ்வுகள், தற்கால அரசியல் நிகழ்வுகள் மற்றும் நம்முடைய எதிர்கால எதிர்பார்ப்புகள் ஆகியவைகளை உள்ளடக்கி இருந்திட வேண்டும். நம்முடைய தலையாய வேண்டுகோளான 10% EWS இடஒதுக்கீட்டினை தமிழகத்தில் நடைமுறைப்படுத்திட இதுகாறும் எந்த அரசும் முன் வரவில்லை என்பதனையும் நாம் கருத்தில் கொண்டிட வேண்டும்.

பிராமண சமூகத்தினர் அனைத்து தேர்தல்களிலும் தங்களது வாக்குகளை 100 சதவீதம் பதிவு செய்திட வேண்டும் என்கின்ற நமது சங்கத்தின் தொடர்ந்த அறைகூவலை மீண்டும் வலியுறுத்துகின்றேன். அப்போது தான் நமது வாக்கு வங்கியின் பலம் அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் தெரிய வந்திடும்.

மாநில பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்தினையும், தாம்ப்ராஸ் மாத இதழ் வாசகர்களின் கருத்தினையும் உடனடியாக தெரிவித்திட கேட்டுக் கொள்கின்றேன்.

தங்களுடைய கருத்தினை magazine@thambraas.org என்கின்ற மின்னஞ்சல் வழியாகவோ அல்லது எழுத்து வழியாக தபால் மூலமாகவோ உடனடியாக தெரிவித்திட அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

பிராமண சமூகத்தினர் அனைவரும் தவறாமல் வாக்களித்திடுவோம்!

நன்றி !

இங்ஙனம்

உங்கள் அன்பு சகோதரன்

திருவொற்றியூர்

என்.நாராயணன்

மாநிலத் தலைவர்

E-mail : ungalnarayanan@gmail.com

Thambraas State Head Quarters

Whatsapp Numbers : 81480 11172 /

81480 11106 (10.00 am to 6.00 pm)




Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS